கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

பெட்டல்புதூர் பள்ளிவாசலில் கந்தூரி விழா கொடியேற்றம்


பொட்டல்புதூர் முஹைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நேற்று நிறைபிறை கொடியேற்றத்துடன் கந்தூரி விழா கோலாகலமாக துவங்கியது. நெல்லை மாவட்டம் கடையம் யூனியன் பொட்டல்புதூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முஹைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா கோலாகலமாக நடைபெறும். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமின்றி தென் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்கியிருந்து சிறப்பு தொழுகை நடத்துவர்.



கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று மதியம் 2 மணியளவில் கீழுர் ஜமாத் நிறைபிறை கொடி ஊர்வலம் மேளதாளங்கள், வீர விளையாட்டுக்களுடன் அலங்கரிக்கப்பட்ட கொடி யானை மீது ஊர்வலமாக புதுமனை தெரு, வடக்கு புதுமனை தெரு, முகமதுஷா தெரு, நடுத்தெரு, கெங்கையம்மன் கோவில் தெரு, நூலக வீதி உட்பட அனைத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் தீன் ஒலி முழங்க கோலாகலமாக கொடியேற்றம் நடந்தது.

கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மார்ச் 3ம் தேதி இரவு 8 மணிக்கு பச்சை களை ஊர்வலம் நடக்கிறது. 4ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி கம் முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு வைபவமும், மதியம் 12 மணிக்கு அரண்மணை கொடியேற்றமும் நடக்கிறது. 2 மணிக்கு மேலூர் ஜமாத் பத்தாம் இரவு கொடி ஊர்வலம் ஆரம்பித்து மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. இரவு 10 மணியளவில் ரவணசமுத்திரத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன்வர மேளதாளங்கள் வீர விளையாட்டுக்களுடன் சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கி அதிகாலை பொட்டல்புதூர் வருகிறது.

மார்ச் 5ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் பள்ளிவாசல் வந்து சேர்ந்த பின்னர் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகும் வைபவம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தீப அலங்கார திடலில் தீப அலங்கார வைபவம் நடக்கிறது. மார்ச் 7ம் தேதி 14ம் இரவு சிறப்பு வைபவமும், ராத்திபு ஓதுதலும் நடக்கிறது. மார்ச் 8ம் தேதி அதிகாலை 6 மணிக்கு பக்தர்களுக்கு நேர்ச்சை வழங்கப்படுகிறது.

கந்தூரி விழா ஏற்பாடுகளை சுவாமி கம் முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா தலைமையில் வக்கீல்கள் முகமதுரபி, சம்சுதீன் முன்னிலையில் முஹைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மேனேஜிங் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக