கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

புளியங்குடியில் காதலனுக்காக தாயை உதறிய பட்டதாரி ஆசிரியை!

புளியங்குடி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி காதலனுடன் தஞ்சம் அடைந்த பெண் பட்டதாரி ஆசிரியை காதல் கணவனுக்காக தாயை உதறிச் சென்ற சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

புளியங்குடி சங்கரவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கற்பகம் மகள் பராசக்தி. பி.எஸ்.சி. பி.எட். பட்டதாரி. ஆசிரியையாக பணிபுரிகிறார். அவரும், நகரம் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் நாராயணன் மகன் பரமகுருவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்று காதல் ஜோடி நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் சென்று அங்குள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் திருமணம் செய்து கொண்டது.

பின்னர் இருவரும் புளியங்குடி காவல் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரின் பெற்றோரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பராசக்தியின் தாயார் கற்பகம் 27 ஆண்டுகளாக வளர்த்த எங்களை விட்டு வேறு ஒருவருடன் செல்வதா, என்னுடன் வந்துவிடு என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால் பராசக்தி கேட்க மறுத்து காதலுடன் செல்ல விரும்புவதாக கூறினார்.

பின்னர் காதல் ஜோடி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றது. தாயை தவிக்கவிட்டுச் சென்ற இச்சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக