கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் கலவர பிரச்னை இருதரப்பினர் சமாதான கூட்டம்

பிற மத உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் இளைஞர்களை இரு பிரிவு பெரியவர்களும் நல்வழி நடத்த அறிவுரை வழங்க வேண்டும் என்று சங்கரன்கோவிலில் இருபிரிவினர் மோதல் தொடர்பாக ஆர்.டி.ஓ., இளங்கோ தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சங்கரன்கோவிலில் கடந்த 7ம் தேதி இரவு ஒரு பிரிவினரின் வழிபாட்டு தலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இரு பிரிவினரிடையே பெரும் கலவரம் நடந்தது.இந்த கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்தும், அடித்தும் நொறுக்கப்பட்டது. கலவரம் காரணமாக 17 பேர் படுகாயமடைந்தனர். கலவரம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் இரு பிரிவினரிடையே சமாதான பேச்சுவார்த்தை நெல்லை ஆர்.டி.ஓ., இளங்கோ தலைமையில் நடந்தது. இதில் கூடுதல் எஸ்.பி., மகேந்திரன், தாசில்தார் தாமோதரன், இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் இரு பிரிவை சேர்ந்த பெரியவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நடந்த சம்பவத்தை காரணம் காட்டி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட கூடாது. நடந்த சம்பவம் குறித்து ஒருவருக்கொருவர் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பிரசாரமோ, ஊடகங்களுக்கு பேட்டியோ அளிக்க கூடாது. இனிவரும் காலங்களில் கோயில் கொடை நிகழ்ச்சிகளில் சட்டம், ஒழுங்கு பாதிக்காக வகையிலும், பிற மத உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் இருதரப்பு இளைஞர்களையும் பெரியவர்கள் நல்வழி நடத்த வேண்டும். 

கொடை விழாவில் பொது அமைதியை சீர்குலைத்த சமூக விரோதிகளை விசாரணையில் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும். சிறு, சிறு பிரச்னைகளை சமூக நல்லிணக்க குழு ஏற்படுத்தி சுமூக தீர்வு காண வேண்டும். வதந்திகளை தேவையற்ற முறையில் பரப்பக்கூடாது. சகோதர, சமத்துவத்துடன் இரு தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டும். கலவரத்தில் பாதிக்கப்பட்ட கடைகள், வாகனங்களுக்கு காப்பீடு செய்யப்படாத இனங்களுக்கு மட்டும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மனுக்கள் பெற்று அரசுக்கு அனுப்பி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிவாசல் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். ஊரணியை சுற்றி நடக்கும் சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும் என முடிவு செய்யப்ப்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக