கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 2 பிப்ரவரி, 2012

கடையநல்லூரில் ரேஷன் கடை சீராக இயங்காததால் மக்கள் அவதி

கடையநல்லூரில் ரேஷன் கடை சீராக இயங்கவில்லை என பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் 3 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.கடையநல்லூர் பொது ஊழியர்கள் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் ரேஷன் கடை மேலக்கடையநல்லூர் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த பண்டகசாலையின் மூலமாக மேலக்கடையநல்லூரில் உள்ள சுமார் 5 வார்டு பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இவற்றில் கூட்டுறவு பண்டகசாலை-1ன் மூலமாக சுமார் 800 ரேஷன் கார்டுகள் இடம்பெற்றுள்ளன.இந்த கார்டுகள் வைத்துள்ள பொதுமக்கள் கூட்டுறவு பண்டகசாலை-1ன் மூலமாக மண்ணெண்ணெய், சீனி, அரிசி உள்ளிட்ட பொருட்களை பெற்று வருகின்றனர். இதனிடையில் பணியாளர் தட்டுப்பாடு காரணமாக ரேஷன் கடை சீராக இயக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக மண்ணெண்ணெய், இலவச அரிசி, சீனி பொருட்களை குறிப்பிட்ட நேரங்களில் பெற முடியாத சூழ்நிலை இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.இதனிடையில் கடந்த 3 தினங்களாக இந்த கடை தொடர்ந்து அடைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகவும் இப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். 3 நாட்கள் கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடை மூடப்பட்டிருப்பது குறித்து விசாரித்த போது கடந்த 30ம் தேதி கடைக்கு விடுமுறை எனவும், 31ம் தேதி தென்காசியில் அலுவல் பணி இருந்ததாகவும், நேற்று மதுரையில் அலுவல் பணிக்காக பணியாளர் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.இருந்தபோதிலும் தொடர்ந்து கடை மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பி சென்றதை பரவலாக காணமுடிந்தது. கடை அடைக்கப்படுவதற்கான காரணத்தை தெரிவிக்ககூடிய தகவல் பலகையிலும் நேற்று மதியத்திற்கு மேல் தான் கடை அடைக்கப்பட்டதற்கான தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாக இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்பட்டது.இந்த ரேஷன் கடை சீராக இயங்கப்படாததற்கு பணியாளர் பற்றாக்குறை பெரும் காரணமாக அமைந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக