கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு ஆதரவாக பாளையில் காங்.சார்பில் நாளை பொதுக்கூட்டம்: மத்திய மந்திரிகள் சிதம்பரம், வாசன் பங்கேற்பு

கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (சனிக்கிழமை) பாளை ஜவகர் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமை தாங்குகிறார். ராமசுப்பு எம்.பி. வரவேற்கிறார். மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், நாராயணசாமி, முன்னாள் மாநில தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய மந்திரிகள் திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா உள்ளிட்ட தலைவர்கள் பேசுகின்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், விஜயதாரணி, பிரின்ஸ் மற்றும் எம்.பி.க்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி நெல்லை மாநகரம் முழுவதும் கொடி தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள் கட்டப்பட்டு உள்ளன. நெல்லை டவுண் ஆர்ச் முதல் மார்க்கெட் வரையும், பாளை பஸ் நிலையம் முதல் சமாதானபுரம் வரையும் காங்கிரஸ் கொடிகள், தலைவர்கள் படங்களுடன் கூடிய வரவேற்பு பேனர்கள் கட்டப்பட்டு உள்ளன.

7 இடங்களில் மின் கோபுர விளக்குகள், 50 இடங்களில் ரவுண்ட் ஆர்ச்சுகள் அமைக்கப்பட உள்ளன. ஜவகர் மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது. கூட்ட மைதானத்தில் காமராஜர், இந்திரா, சோனியா, ராகுல், பிரதமர் மன்மோகன்சிங், மூப்பனார் மின் அலங்கார கட்- அவுட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கூட்டத்துக்கு வரும் மூத்த தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளது. பொதுக்கூட்ட மேடையை சுற்றி இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்த 100 பேர் சிறப்பு சீருடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து தொண்டர்களை அழைத்து வர நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக