கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 4 ஜனவரி, 2012

நெல்லை சந்திப்பில் பரிதாபம்: அய்யப்ப பக்தர்கள் பஸ் மோதி பெண் பலி


சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முருகன், கார் டிரைவர். இவரது மனைவி முப்புடாதி(வயது 25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இன்று காலை முருகன், தனது மனைவி,குழந்தைகளுடன் பாளையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பைக்கில் மீனாட்சிபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
 
நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை கடந்து அரவிந்த் கண் மருத்துவமனை அருகே வரும் போது, அவர்களது பின்னால் வேகமாக வந்த மினி பஸ் எதிர்பாராதவிதமாக பைக்கில் மோதியது. இதில் பைக்கில் இருந்து முருகன், அவரது மனைவி, குழந்தைகள் கீழே விழுந்தனர்.
 
அப்போது பஸ்சின் சக்கரம் கீழே விழுந்த முப்புடாதியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். முருகன் மற்றும் அவரது குழந்தைகள் காயமடைந்தனர்.
 
இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் திருமலை, கிளாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காயமடைந்த முருகன், அவரது குழந்தைகளை மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
 
முப்புடாதி உடலையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் மீது மோதிய மினி பஸ்சில் அய்யப்ப பக்தர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக