கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

கடைய நல்லூரில் பரிதாபம் : புது மாப்பிள்ளை மர்மச்சாவு புதுப்பெண் அதிர்ச்சி

kadayanallur 
கடைய நல்லூரில் பரிதாபம் : புது மாப்பிள்ளை மர்மச்சாவு 
புதுப்பெண் அதிர்ச்சி 

பத்திரிக்கை செய்தி 


மீண்டும் புத்துணர்ச்சியுடன் குற்றால அருவி


குற்றால அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாகவே உள்ளது.
குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஏமாற்றிவிட்டது. கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 20 நாட்கள் மட்டுமே சாரல் மழை பெய்தது. மேலும் ஒரு சில நாட்கள் கோடை காலத்தை போல் வெயில் அடித்தது. சீசன் தவறாமல் குற்றாலம் வரும் பழக்கமுள்ளவர்கள் இந்த ஆண்டு வரவில்லை. மேலும் சீசன் கால வியாபாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குளு குளு சாரலுடன் அருவிகளில் நன்றாக தண்ணீர் கொட்டுகிறது. நேற்று பகல் முழுவதும் வெயில் இல்லாமல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதற்கிடையே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் பரவலாக விழுகிறது. ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. தண்ணீரே விழாத பழைய குற்றால அருவியிலும், புலியருவியிலும் கூட தண்ணீர் நன்றாக விழுகிறது.
இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் சுமாராகத் தான் இருக்கிறது.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைகளிலும் ஒரே நேரத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடத்தை பெற்று சாதனை


சர்வதேச அளவிலான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல்களில் ஒரே நேரத்தில் முதலிடத்தை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா புதிய சாதனையை படைத்துள்ளது.
சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்து, சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) வரிசைப்படுத்தி பட்டியலை வெளியிடுகிறது. இதில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் தனித்தனியாக வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, அந்நாட்டு அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தை பிடித்தது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் துவக்க வீரர் ஆம்லாவின் 150 ரன்களின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 40.4 ஓவர்களின் முடிவில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் 120 புள்ளிகளுடனும், டுவென்டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் 130 புள்ளிகளுடனும் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைகளிலும் ஒரே நேரத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

சவூதி அரேபிய பாராலிம்பிக் அணியில் உள்ளோர் திருடர்கள்... நடிகரின் திமிர்ப் பேச்சு!


ஸ்காட்லாந்தைச் சேர்ந்த காமெடி நடிகர் பிராங்கி பாயில் என்பவர், பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள சவூதி அரேபிய அணியைப் பார்க்கும்போது திருடர்கள் போலத் தெரிவதாக கூறியுள்ளார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்காரர்களுக்கு மற்ற நாட்டவர்களை மட்டம் தட்டிப் பேசுவது என்றால் கிலோ கணக்கில் மஸ்கோத்து அல்வா சாப்பிடுவது போல. குறிப்பாக இனவெறிக் கருத்துக்களைக் கூறுவதற்கு அவர்கள் பயப்படவே மாட்டார்கள். அப்படி ஒருதிமிர்வாதம் பிடித்தவர்கள் அவர்கள். இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் பலமுறை இனவெறிக் கருத்துக்களைக் கூறி வாங்கிக் கட்டிக் கொண்டவர்.
இந்த நிலையில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த காமெடி நடிகர் பிராங்கி பாயில் என்பவர் சவூதி அரேபிய பாராலிம்பிக் அணியைச் சேர்ந்தவர்களை திருடர்கள் என்று டிவிட்டரில் விமர்சித்து வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். ஏற்கனவே இவர் பலமுறை திமிர்த்தனமாக பேசியவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது லண்டனில் பாராலிம்பிக் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. அதுகுறித்து அவர் டிவிட்டரில் சில விஷமத்தனமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சவூதி அரேபிய அணியைப் பார்க்கும்போது அவர்களில் பலரும் திருடர்கள் போலவே இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். அதாவது கை ஊனமுற்றோரைப் பார்த்துத்தான் இவ்வாறு திமிராகப் பேசியுள்ளார் பிராங்கி. திருட்டுத்தனம் செய்து அதற்குத் தண்டனையாக கைகளை வெட்டி தண்டனை கொடுத்துள்ளதைப் போல அவர்கள் இருக்கிறார்களாம். இதன் மூலம் சவூதி அரேபியாவில் கடுமையான தண்டனைகளை கொடுப்பதை சுட்டிக் காட்டுகிறாராம் இந்த காமெடி நடிகர்.
இவரின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஊனமுற்றோரையும், சவூதி அரேபிய சட்டத்தையும் இவர் அவமதித்துள்ளார், இழிவுபடுத்தியுள்ளார் என்று எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
பிராங்கியைக் கடுமையாக கண்டித்து பலரும் டிவிட்டரில் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

புதன், 29 ஆகஸ்ட், 2012

ஆற்றில் குளிக்கும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்த பாஜக தலைவர்


ஆற்றில் குளிக்கும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்த பாஜக தலைவர் 
காவிரியாற்றில் மணல் அள்ள தடைகோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்த, கரூர் மாவட்ட, பா.ஜ., தலைவர் சிவசாமி மீது  புதுப்பாளையம் கிராம மக்கள் .ஆற்றில் குளித்த பெண்களை படமெடுத்ததாக  கரூர் மாவட்ட எஸ்.பி., சந்தோஷ்குமாரிடம் மக்கள் புகார் செய்தனர். 
அந்த புகார் மனுவில்,   ‘’கரூர் மாவட்டம் புதுப்பாளையம் காவிரியாற்றில், புதிய மணல் குவாரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த, 26-ம் தேதி, மதியம், 3 மணிக்கு, கரூர் மாவட்ட, பா.ஜ., தலைவர் சிவசாமி உள்பட, 15 பேர் அங்கு வந்து, "உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளோம், புதிய மணல் குவாரி அமைக்க கூடாது' என்று கூறினர்.
பின்னர், காவிரியாற்றில் குளித்து கொண்டிருந்த பெண்களை, சிவசாமி மற்றும் அவருடன் வந்த ஆட்கள் வீடியோ கேமரா மூலம் படமெடுத்தனர். அதை தட்டி கேட்ட எங்களை தகாத வார்தையால் திட்டினர். பிறகு,  அவர்கள் வந்த காரின் கண்ணாடியை, அவர்களே கல்லை எடுத்து உடைத்தனர்.
ஆனால், ஊர்ப்பொதுமக்கள் கார் கண்ணாடியை உடைத்து விட்டதாக, வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில், சிவசாமி பொய்யான புகார் கொடுத்துள்ளார். பெண்களை ஆபாசமாக படம் எடுத்த சின்னசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ’’தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்ட விதிகளின்படி அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. தேர்வு எழுதிய 6.67 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 
ஒரு தேர்வில் 99.6 விழுக்காட்டினர் தோல்வி அடைந்திருப்பதை வைத்து பார்க்கும் போது தேர்வு எழுதியவர்களிடம் குறை இல்லை. தேர்வு முறையில் தான் குறை உள்ளது என்பதை உணர முடிகி றது.  மனப்பாடம் செய்துவிட்டு வந்து ஒப்பிக்கும் முறையை ஊக்குவிக்கும் வகையில் தான் தகுதித் தேர்வு முறை அமைந்துள்ளது.
 
99 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தோல்வி அடைந்து விட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது, ஆண்டுக்கணக்காக படித்த பட்டய மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. 

இந்தியாவின் எதிர் காலம் சிறப்பாக வடிவமைக்கப்பட வேண்டும் என்றால் ஆசிரியர்களுக்கு சிறப்பான கல்வியும், பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். நிகழ்கால  சவால்களை சமாளிக்கும் வகையில் கல்வியியல் பட்ட, மற்றும் பட்டயப் படிப்புகளை மேம்படுத்த வேண்டும்.

ஒன்றுக்கும் உதவாத தகுதித் தேர்வை நடத்துவது திறமையை வளர்க்கவோ, அளவிடவோ உதவாது. எனவே, ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்த முறைப்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பின் அடிப்படை யில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். 

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஓராண்டு கட்டாயப்பயிற்சி அளித்து ஆசிரியர் பணியில் அமர்த்த வேண்டும். அப்போது தான் தரமான கல்வியை வழங்கமுடியும்’’ என்று கூறியுள்ளார்.

எஸ்.எம்.எஸ். வதந்திகளை நம்பாதீர், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு வேண்டுகோள்...!


எஸ்.எம்.எஸ். வதந்திகளை நம்பாதீர், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு வேண்டுகோள்...!




கடந்த ஆகஸ்ட் 25,26 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் கூடியது. இக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர். ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஏ. ஹாலித் முஹம்மது, துணை தலைவர் மு. முஹம்மது இஸ்மாயில். செயலாளர்கள் ஆரிஃப் பைசல் மற்றும் மு. ஷேக் முஹம்மது அன்சாரி, பொருளாளர் கே.எஸ்.எம். இப்ராஹிம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள்:

1. கடந்த ஜூலை மாதம் முதல் அஸ்ஸாம் மாநிலத்தில் தொடர்ச்சியாக கலவரங்கள் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 85 நபர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுளளார்கள். மாநில அரசு பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையிலும் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்ப சென்ற மக்களும் தாக்கப்பட்டும் கொல்லப்படும் வருகிறார்கள். 2 மாதத்திற்கும் மேலாக கலவரத்தை அடக்கி சமூக நிலையை ஏற்படுத்தõதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்நிலையில் மதவாத பா.ஜ.க. மற்றும் சில கட்சிகளும் ஊடகங்களும் இந்த கலவரம் போடோ இன மக்களுக்கும் வங்காள தேசத்திலிருந்து சட்ட விரோதமாக குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே நடப்பதாக கூறி வருவது மாநில அரசு கலவரத்தை முற்றிலும் அடக்க இயலாமைக்கு காரணமாக அமைகிறது. மேலும் அஸ்ஸாமில் வாழும் இந்திய முஸ்லிம்களையும் வங்க தேசத்தை சார்ந்தவராக குற்றம் சுமத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில் சமுக விரோத சக்திகள் எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பிய வதந்திகளால் வட கிழக்கு மாநிலத்தவர்கள் பெருமளவில் பெங்களுர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களிலிருந்து அச்சத்தினால் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப சென்றுள்ளார்கள்.


இந்த பிரச்சனைகளை முற்றிலும் திசை திருப்பும் விதமாக சில ஊடகங்கள் இந்த வதந்தி பரப்பப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீது வீண்பழி சுமத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
இந்த வதந்தியை பரப்பி பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கிய தீய சக்திகளை நேர்மையான முறையில் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் செயற்குழு மத்திய மற்றும் மாநில அரசை வலியுறுத்துகிறது. மேலும் மக்கள் வீண் வதந்திகளை நம்பி பீதிவயப்படாமல் இருக்குமாறும் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.


2. தமிழகத்தில் மொத்த இடஒதுக்கீடு 69% அமுலில் இருந்து வருகிறது. இந்த 69% இடஒதுக்கீட்டு வழக்கில் கடந்த ஜூலை 13 2012 அன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், இந்த 69% இடஒதுக்கீடு ஒரு வருடம் காலம் வரையே நீடித்தது. இது விஷயத்தில் மாநில அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் 69% இடஒதுக்கீடு வழங்கியதற்காக விளக்கம் கொடுக்குமாறு அறிவுறுத்தியது. இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீதியரசர் எம்.எஸ். ஜனார்தனன் அவர்களது தலைமையில் கமிஷன் ஒன்றை நியமித்து ஆய்வு செய்து 69% இடஒதுக்கீட்டை தொடர வேண்டும் என்று கடந்த ஜூலை 13,2011ம் ஆண்டு மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியது பாராட்டத்ததக்கது.


இந்நிலையில் கடந்த ஜூலை 14, 2012 அன்று இந்த 69% சதவீகித இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே மாநில அரசு 69% சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க தொடர்ந்து சட்டரீதியான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.


3. சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்! என்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஒருமாத கால பிரச்சாரத்தின் இறுதி நாளான செப்டம்பர் 15 அன்று காலை 11 மணி முதல் 11.30 வரை தேசிய அளவில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் செப்டம்பர் 15 அன்று சரியாக காலை 11 மணியிலிருந்து 11.30 மணிவரை அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இப்போராட்டத்தில் பொதுமக்கள் பெருமளவு கலந்து கொள்ள வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள் வைக்கிறது.


4. மதுவினால் ஏற்படும் பிரச்சனைகளையும் அழிவுகளையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்துமாறு மாநில செயற்குழு கேட்டு கொள்கிறது.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

கடையநல்லூரில் முயல் வேட்டையாடிய 3 பேர் கைது

கடையநல்லூரில் முயல் வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  
 கடையநல்லூர் ரயில்வே கேட் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடையநல்லூர் வனச்சரகர் வெள்ளத்துரை தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாய் மூலம் முயல் வேட்டையில் ஈடுபட்ட மாவடிக்காலை சேர்ந்த ராமகிருஷ்ணன் (20), மகாலிங்கம் (26), ரகுமான் (18) ஆகியோரை கைது செய்து அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இதுதொடர்பாக மாவடிக்காலை சேர்ந்த 4 பேரை தேடிவருகின்றனர்.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

கடையநல்லூரில் வசிக்கும் 101 வயது ஓய்வு பெற்ற ஆசிரியர்:



அறுபது வயதை கடந்து வாழ்வதே அரிதாகி விட்ட இந்த காலகட்டத்தில் 100 வயதை கடந்த முதியவர் திடகாத்திரமாக வாழ்ந்து வருகிறார். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த அவரது பெயர் சுப்பையாநாயுடு. 15-8-1912-ந்தேதி பிறந்த இவர் இந்த மாதம் 100 வயதை கடந்து 101வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.
 
காசிதர்மம் ஜில்லா போர்டு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த இவர் 1971-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த 40 ஆண்டுகளாக பென்சன் பெற்று வருகிறார். யாருடைய துணையும் இல்லாமல் தனது தேவைகளை தானே செய்து வருகிறார். தினமும் தனது தோட்டத்திற்கு சென்று விவசாய பணிகளை கவனித்து வருகிறார்.
 
பேரன், பேத்திகளோடு இன்பமாக வாழ்க்கை நடத்தி வரும் அவர் கூறியதாவது:-
 
திடகாத்திரமாய் இருக்கும் எனக்கு எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாது. 101 வயதின் துவக்கத்தை எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். தினமும் நடைபயிற்சியை தவறாமல் கடைபிடித்து வருகிறேன் என்றார். 

அஸ்ஸாம் முஸ்லிம்களுக்கு தாராளமாக உதவுங்கள்


அஸ்ஸாம் முஸ்லிம்களுக்கு தாராளமாக உதவுங்கள்















அஸ்ஸாமில் அகதிகளாக அல்லல் படும் 4லட்சம் முஸ்லிம்களுக்கு துயர் துடைக்கும் பணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈடுபட்டுள்ளது.
இதற்காக சமுதாயம் தாராள மனதோடு நிதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சமுதாய வழங்கும் சமுதாய நிதியை
IUML RELIEF FUND
State Bank Of India
Current Account No: 32476975149
Thousand Lights Branch Code 3207 chennai

என்ற பெயருக்கு
காயிதே மில்லத் மன்ஸில்
36, மரைக்காயர் லெப்பை தெரு, சென்னை - 600 001 என்ற முகவரிக்கு விரைவாக அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.
துன்பத்தில் உள்ளவர்களின் துயர் துடைக்கும் பணியைஸ் செய்வோம்..! தூயவனான அல்லாஹ்வின் பேரருளைப் பெறுவோம்...!

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் மூன்றாவது முறையாக இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது.


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டிகளில் இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் உன்முக்த் சந்த், பீல்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தட்டுத் தடுமாறி ரன்களை எடுத்துக் கொண்டிருந்தது. 38 ரன்களில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் வில்லியம் அதிரடியாக ஆடினார். அவர் 87 ரன்களை எடுத்தார். அவருக்கு டிராவிஸ் ஹெட் கை கொடுத்தார். டிராவிஸ் 37 ரன்களை எடுத்தார். 200 ரன்களைக் கூட எடுக்காது என்று நினைத்திருந்த ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் சந்தீப் சர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி அடுத்து களமிறங்கியது. இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை காப்பாற்றிக் கொண்டு அபாரமாக ஆடினர். இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணியின் உன்முத் சந்த் 111 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கும் இந்தியா ஜூனியர் உலகக் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றியிருக்கிறது.

சனி, 25 ஆகஸ்ட், 2012

கடையநல்லூர் டாக்டர் சஞ்சீவி இல்லத் திருமண விழா : மணமக்களை அமைச்சர் செந்தூர்பாண்டியன் வாழ்த்தினார்

கடையநல்லூர் நகராட்சி முன்னாள் தலைவரும், மாவட்ட அதிமுக மருத்துவ அணி தலைவருமான டாக்டர் சஞ்சீவி இல்லத் திருமண விழாவில் மணமக்களை அமைச்சர் செந்தூர்பாண்டியன் வாழ்த்தினார்.கடையநல்லூர் நகராட்சி முன்னாள் தலைவர் டாக்டர் சஞ்சீவி - சங்கரேஸ்வரி ஆகியோரது மகன் டாக்டர் பிரின்ஸ்யோகானந்த், கேரள மாநிலம் கொச்சின் போனோத்குமார் ஜெயக்குமார் - சுசீலா ஆகியோரது மகள் டாக்டர் சுமன் ஜெயக்குமார் திருமணம் நடந்தது.

மணமக்களை தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், சமூகநல இயக்க தலைவர் ராஜபாளையம் குவைத்ராஜா, ரோட்டரி முன்னாள் கவர்னர் ஆறுமுகப்பாண்டியன், ரோட்டரி கவர்னர் தேர்வு ஜேசையா வில்வராயர், அதிமுக மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் அருள்ராஜ், மாவட்ட பொருளாளர் இலஞ்சி சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞரணி இணை செயலாளரும், அச்சன்புதூர் டவுன் பஞ்.,தலைவருமான டாக்டர் சுசீகரன், மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் ராஜேந்திரன், மெடிக்கல் சரவணன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் யாத்ரா பழனி, மாவட்ட பிரதிநிதி பெருமையாபாண்டியன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் முருகன், நகர மாணவரணி செயலாளர் செங்கலமுடையார், முன்னாள் யூனியன் சேர்மன் சொக்கம்பட்டி மாரியப்பன், ரோட்டரி பவர்டீ சேர்மன் அப்துல்காதர் மற்றும் ரோட்டரி சங்கத்தினர், அதிமுக நிர்வாகிகள், லயன்ஸ் சங்கத்தினர், பொதுநல அமைப்பினர் வாழ்த்தினர்.முன்னதாக திருமண விழாவிற்கு வருகை தந்தவர்களை முன்னாள் நகராட்சி தலைவர் டாக்டர் சஞ்சீவி - சங்கரேஸ்வரி, டாக்டர்கள் தேவிகற்பூர நாயகி, புஷ்பலதா மற்றும் தீபா, கபூர் உட்பட பலர் வரவேற்றனர்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

திருமண வீட்டாரை கவலையடையச் செய்யும் வாழை இலை


நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் வாழை இலை தட்டுப்பாட்டால் ஒரு இலை ரூ.4க்கு விற்கப்படுகிறது. இதனால் ஹோட்டல்களில் செயற்கை பேப்பர் இலை பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளுக்கு நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து தான் வாழை இலை அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வாழை இலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அணைகள், குளங்கள் நிரம்பாததால் நெல் பயிரிடுவோர் பயிர் செய்யவில்லை. மேலும் தென்னை, வாழை போன்ற பயிர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் காய்கறி, இலை போன்ற பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.
ஆவணி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அதிக அளவு நடைபெறும் நிலையில் காய்கறி விலை உயர்வால் ஏழை, நடுந்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தற்போது தொடர்ந்து திருமண தினங்கள் வருவதால் திருமண வீட்டார் வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில் சாப்பிடுவதற்கான வாழை இலை ஒன்று தற்போது ரூ.4 வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல ஹோட்டல்களில் வாழை இலைக்கு பதில் பேப்பர் இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருமணங்களிலும் செயற்கை இலை பயன்பாடு அதிகரித்து வருகிறது.
சாதாரணமாக 5 இலைகள் கொண்ட 1 பூட்டு இலை ரூ. 4க்கு விற்ற காலம் போய் தற்போது 1 இலை 4 ரூபாய்க்கு விற்கப்படுவதால் செயற்கை இலை வாங்குவதை தவிர வேறு வழியில்லை எனவும், பல நேரங்களில் ஒரு இலை 4 ரூபாய்க்கு கூட கிடைப்பதில்லை எனவும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர். அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி போன்ற அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் தற்போது வாழை இலை விலையும் உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

பெட்ரோல் விலை 3 ரூபாய் உயர்கிறது: எண்ணை நிறுவனங்கள் முடிவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கான அதிகாரத்தை எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. 

கடந்த மாதம் 24-ந்தேதி பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. பெட்ரோல் ரூ.7 உயர்த்தப்பட்டு பிறகு மீண்டும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஒரு பேரலுக்கு 10 டாலர் வரை உயர்ந்து விட்டது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 113 டாலராக உள்ளது. இதனால் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனையில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

தினசரி ஏற்படும் பல கோடி ரூபாய் இழப்பை சரி கட்ட பெட்ரோல் விலையை உடனே உயர்த்த வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு எண்ணை நிறுவனங்கள் வலியுறுத்தின. லிட்டருக்கு ரூ. 1.50 உயர்த்தினாலே போதும் என்றும் எண்ணை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. 

ஆனால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க இருந்ததால் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் இழப்பு அதிகரித்துள்ளதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 வரை அதிகரிக்க வேண்டும் என்று தற்போது எண்ணை நிறுவனங்கள் கூறி வருகின்றன. 

மத்திய அரசுக்கும் இதை ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அடுத்த மாதம் முதல் வாரம் பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

அழிந்து வரும் மேற்கு தொடர்ச்சி மலை வனபகுதி: கண்டுகொள்ளுமா அரசு?


நெல்லை மாவட்டத்தின் வளம் மிக்க பகுதியும், கேரளா எல்லையுமான கடையநல்லூர், மேக்கரை, செங்கோட்டை, குற்றாலம், பழைய குற்றாலம், கடையம், மத்தளம் பறை பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஈத்தல் என்றழைக்கப்படும் மூங்கில் தொடர்ந்து வெட்டப்படுவதால் நீர்பிடிப்பு குறைவதுடன், யானைகள் ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக-கேரள மாநிலங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வரும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அரிய வகை மிருகஙகளையும், மரங்களையும், மூலிகைச் செடிகளையும் கொண்ட இயற்கை வளம் மிக்க பகுதியாகும். இங்கு யானை, சிறுத்தை, மிளா, காட்டுப்பன்றி போன்ற மிருகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. மேலும் பறக்கும் அணில் போன்ற அபூர்வ வகை அணில்களும், பலதரப்பட்ட பறவைகளும் உள்ளன. ஏராளமான அருவிகளும், நதிகளும் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி இயற்கை நமக்கு தந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகும். ஆனால் சமீபகாலமாக மேக்கரை, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இயற்கை வளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது.
அபூர்வ வகை மரம், மூலிகைச் செடிகள் தீ உள்ளிட்ட சக்தியாலும், சமூக விரோத கும்பல்களாலும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் யானை, மான், மிளா போன்ற உயிரினங்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறது. காடுகளை பாதுகாக்க வேண்டிய வனத்துறையினர் முழு ஈடுபாட்டோடு செயல்படாததாலும், பல நேரங்களில் காட்டை அழிப்பவர்களோடு கைகோர்த்து செயல்படுவதாலும் தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் காடுகளின் பரப்பளவு 33 சதவீதம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு மளமளவென குறைந்து தற்போது 18 சதவீதமாக உள்ளதாக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காடுகளை பாதுகாக்கவும், காடுகளின் பரப்பளவை அதிகரிக்கவும் ஜப்பான் நாட்டு நிதியுதவியோடு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த டிஏபி எனப்படும் காடுகள் பாதுகாப்பு திட்டமும் சரிவர செயல்படுத்தப்படாததால் காடுகள் குறைந்து, மழை பொய்த்து, பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலை உருவாகி வருகிறது. காடுகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தங்கள் வாழ்விற்காகவும், வருமானத்திற்காகவும் காடுகளை நம்பி இருந்தவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பிற்கு திட்டமிடப்பட்டது. அதாவது அவர்கள் காடுகளை நம்பி இல்லாமல் வேறு சுய தொழில் செய்து பிழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் இத்திட்டம் கடையநல்லூர், செங்கோ்ட்டை, தென்காசி பகுதியில் சரிவர செயல்படுத்தப்படாததால் காடுகள் தொடர்ந்து அழிந்து வருகிறது. குறிப்பாக செங்கோட்டை, மேக்கரை, கடையநல்லூர் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மூங்கில் அதிகம் வளர்ந்துள்ளது. இந்த வகை மூங்கில் யானைகளுக்கு உணவாவதுடன் நீர்பிடிப்புக்கு அதிகம் துணை செய்கிறது. இதனால் காடுகளில் உள்ள நீர்நிலைகளில் கோடை காலத்திலும் தண்ணீர் இருக்கும். இவற்றால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் உள்பட எந்த மிருகமும் ஊருக்குள் வராமல் இருந்தன. ஆனால் தற்போது இந்த வகை மூங்கில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களால் அதிக அளவு வெட்டப்பட்டு வருகிறது. அங்கு வளரும் மூங்கில்கள் ஜவுளிக் கடை பைகளுக்கு கைப்பிடியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதன் காரணமாக அங்குள்ள மூங்கில்களுக்கு சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆர்டர் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் செங்கோட்டை, கடையநல்லூர் பகுதியில் மூங்கில் அதிக அளவுக்கு வெட்டப்பட்டு செங்கோட்டை பகுதிகளிலேயே சைஸ் செய்யப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மூங்கில் வெட்டப்பட்டு அனுப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த முறைகேட்டில் அரசியல்வாதிகளோடு, வனத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் பல ஆண்டுகளாக இந்த தொழில் தொய்வில்லாமல் நடந்த வண்ணம் உள்ளது. வேலியே பயிரை மேய்வதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் தற்போது ஆண்டுதோறும் இப்பகுதியில் மழை அளவு குறைந்து வருவதால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து தமிழக அரசுக்கு அடிக்கடி புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஜவுளிக் கடை பைகளுக்கு பயன்படும் இந்த மூங்கில்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் காடுகளில் வளர்ந்துள்ள மூங்கில்கள் அதிக அளவில் வெட்டப்படுகிறது. இதனால் கடையநல்லூர் பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மலையடிவாரங்களில் உள்ள தென்னை, வாழை தோட்டங்களை அழித்து வருகிறது.
கடந்த ஆட்சி காலத்தில் விவசாய நிலங்களுக்குள் மிருகங்கள் புகாத வண்ணம் சுமார் ரூ. 5 கோடி செலவில் அமைக்கப்பட்ட சோலார் மின்வேலியும் செயல் இழந்து விட்டதால் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கேரள வனத்துறையும், தமிழக வனத்துறையும் இந்த விஷயத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி அழிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களின் வாழ்விடம் அழிக்கப்படுவதால் யானைகள் மனிதர்களின் வாழ்விடங்களை அழிக்கும் நிலை உருவாகி வருவதை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

கடையநல்லூர் மலையில் மூங்கில்கள் வெட்டி அழிப்பு சோலார் மின் வேலியும் செயல் இழப்பு ஊருக்குள் யானைகள் புகும் அபாயம்

கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சோலார் மின் வேலி செயலிழந்ததுடன்,  மூங்கில் கள் தொடர்ந்து வெட்டப்படுவதால் யானைகள் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
தமிழக-கேரள மாநிலங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வரும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அரிய வகை விலங்குகள், மரங்கள், முலிகை செடிகளை கொண்ட இயற்கை வளம் மிக்க பகுதியாகும். இங்கு பறக்கும் அணில் போன்ற அபூர்வ வகை அணில்களும் பலதரப்பட்ட பறவைகளும் உள்ளன. ஏராளமான அருவிகளும், நதிகளும் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி இயற்கை நமக்கு தந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகும். 
ஆனால் சமீபகாலமாக நெல்லை மாவட்டம் கடையநல் லூர், மேக்கரை, செங்கோட்டை பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இயற்கை வளம் திட்டமிட்டு சமூக விரோத கும்பலால் தீவைத்து அழிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் மான், மிளா போன்ற உயிரினங்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. காடுகளை பாதுகாக்க வேண்டிய வனத்துறையினர் முழு ஈடுபாட் டோடு செயல்படாததா லும், பல நேரங்களில் காட்டை அழிப்பவர் களோடு கைகோர்த்து செயல்படுவ தாலும் காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.  
 செங்கோட்டை, மேக்கரை, கடையநல்லூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மூங்கில் அதிகம் வளர்ந்துள்ளது. இந்த வகை மூங்கில் யானைகளுக்கு உணவாவதுடன் நீர்பிடிப்புக்கு அதிகம் துணை செய்கிறது. 
இதனால் காடுகளில் உள்ள நீர்நிலைகளில் கோடை காலத்திலும் தண்ணீர் இருக்கும். எனவே, உணவு மற்றும் தண்ணீரைத் தேடி யானைகள் உளிட்ட வன விலங்குகள் ஊருக் குள் வராத சூழ்நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது இங்குள்ள மூங்கில்கள் நாள்தோ றும் நூற்றுக்கணக்கான தொழிலா ளர்களால் வெட்டப்பட்டு வருகிறது. 
இந்த வகை மூங்கில்கள் பெரிய வகை பைகளுக்கு கைப்பிடியாக பயன்படுத்தப்படுவதால் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆர்டர் குவிந்த வண்ணம் உள்ளது.
இதனால் செங்கோட்டை, கடையநல்லூர் மலைப்பகுதியில் இந்த வகை மூங்கில் அதிக அள வுக்கு வெட்டி எடுத்து செங் கோட்டை பகுதிகளிலேயே சைஸ் செய்யப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக் கும் அனுப்பப்பட்டு வருகிறது. 
தினந்தோறும் லட்சக்கணக் கான ரூபாய் மதிப்பிற்கு மூங்கில்கள் வெட்டப்பட்டு அனுப்பப்பட்டு வருவதாக வன ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின் றனர்.
இதனால் தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் கூட்டமாக வந்து மலையடிவாரங்களில் உள்ள தென்னை, வாழை தோட்டங்களை அழித்து வருகின்றன. மேலும் விவசாய நிலங்களில் விலங்குகள் புகாமல் தடுக்க 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சோலார் மின்வேலியும் செயல் இழந்து விட்டது.
இதனாலும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதாக விவசாயி கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் வலியுறுத்தியுள் ளனர்.

கடையநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடையநல்லூரில் பகல் நேரத்தில் வெயிலின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.கடையநல்லூர்  மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பருவ மழை பொய்த்து விட்டது. இதனால் விவசாய நிலங்கள் பயிர் சாகுபடி இல்லாமல் வானம் பார்த்த பூமியாக இருக்கிறது. வறட்சி தாண்டவமாடி வருகிறது. இதனை அதிகரிக்கும் வகையில் பகல் நேரத்தில் வெயிலின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. அனல் பறக்கும் வெயிலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இரவு நேரம் புழுக்கம் அதிகமாக இருக்கிறது. "பவர் கட்' அதிகரிப்பதால் மக்கள் இரவு நேரம் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பகல் நேரத்தில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது. சாலையோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அனல் பறக்கும் வெயிலுக்கு விடை கொடுத்து, வறண்டு காணப்படும் நிலங்களை வளமான நிலமாக்க வருண பகவான் தான் கருணை காட்ட வேண்டும்.

கடையநல்லூரில் காற்றாலைகளுக்கு அனுமதி பஞ்., தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

கடையநல்லூரில் காற்றாலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என யூனியன் பஞ்., தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.கடையநல்லூர் யூனியன் பஞ்., தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம் புதுக்குடி பஞ்., தலைவர் கோபிராஜ் தலைமையில் நடந்தது. காசிதர்மம் பஞ்., தலைவர் ஆனைகுட்டி பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பஞ்., தலைவர்கள் ஆனைகுளம் கலீல்ரகுமான், போகநல்லூர் ராஜேந்திரன், சொக்கம்பட்டி பூபதிசந்தனபாண்டியன், இடைகால் செல்லப்பா, கம்பனேரி மூக்கையா, கொடிக்குறிச்சி முத்தையா, நயினாரகரம் டெய்சிராணி வள்ளிக்குமார், குலையநேரி சீதாபாலமுருகன், புன்னையாபுரம் ராமசுப்பு, பொய்கை மாடசாமி, நெடுவயல் பேபி சரோஜா, ஊர்மேலழகியான் முத்துலெட்சுமி குணசேகரன், வேலாயுதபுரம் முருகன் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கடையநல்லூர் யூனியன் பகுதிகளில் நடந்து வரும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 132 ரூபாய் ஊதியம் உயர்வு கடந்த ஜூன் 5ம் தேதி முதல் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இடையூறு செய்யும் சில அரசியல் கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாடு திட்டம் (தாய்) வேலைகளை பஞ்., மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கான டெண்டரையும் பஞ்., மூலமாகவே மேற்கொள்ள தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது.தமிழக முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் பயனாளிகளை பஞ்., நிர்வாகம் மூலமாக தான் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தகுதியுள்ள பயனாளிகளுக்கு கடையநல்லூர் யூனியனில் சில காரணங்களால் பயனாளிகளை தேர்வு செய்ய தயக்கம் காட்டப்பட்டு வருகிறது. எனவே தகுதியுள்ள பயனாளிகளுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் பயன் கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளப்பட்டது.கடையநல்லூர் யூனியனுக்குட்பட்ட பஞ்.,களின் வருமானத்தை பெருக்கிடும் வகையில் காற்றாலை நிறுவனங்களுக்கு பஞ்.,சில் அனுமதி பெற உத்தரவிட கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

புதன், 22 ஆகஸ்ட், 2012

முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்கும் பலர் கடையநல்லூர் பகுதி விஏஓ அலுவலகங்களில் அலைக்கழிப்பு

தமிழக அரசு ஆதரவற்ற முதியோர், விதவைகள், முதிர்கன்னிகள் உள்பட பல தரப்பினருக்கு மாத ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. ஆனால் புதிதாக மனு செய்யும் தகுதியுள்ள பலர் இத்தொகை கிடைக்காமல் இழுத்தடிக்கப்படுகின்றனர்.
முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்கும் பலர் அலைந்து திரிந்து டாக்டரிடம் வயது சான்று  பெற்று விஏஓ, வருவாய் ஆய்வாளர்களிடம் சென்றால் அவர்கள் பல மாதங்கள் அலைக்கழிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். 
மேலக்கடையநல்லூர் பகுதியில் இயங்கி வரும் விஏஓ மற்றும் வருவாய் ஆய் வாளர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை என புகார் கூறுகின்றனர். அலுவலகத்தில் இருந்தாலும் மனு கொடுப்பவர்களிடம் சரிவர விசா ரணை செய்யாமல் தட்டி கழிப்பதிலேயே உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர். வாரத்தில் முதல் நாளாவது விஏஓ அலுவலகத்தில் அலுவலர்கள் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்திய போதும் யாரும் இதை பொருட்படுத்துவதில்லை. இதுகுறித்து தாசில்தார், கலெக்டரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
பல்வேறு நல உதவிகள் பெற நேரிடை யாக அலுவலர்களை பார்த்தால் கிடைக் காத சூழ்நிலையில் புரோக்கர்களிடம் சென்று பல ஆயி ரம் செலவழித்தால் காரியம் எளிதாக நடப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கடையநல்லூர் பகுதி விஏஓக்கள் ஏழை, எளிய ஆத ரவற்ற தகுதியான அனை வருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

'காத்தடிச்சா தான் கரண்டு'!: மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு 942 மெ.வாட் மின்சாரம் பற்றாக்குறை


மத்திய மின் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய மின்சாரத்தில் 942 மெகா வாட் அளவு வரையிலான மின்சாரம் குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 10,464 மெகா வாட் ஆகும். இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் நீர், நிலக்கரி, வாயு மின் உற்பத்தி நிலையங்கள் 5,804 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளன.
இதுதவிர மத்திய தொகுப்பிலிருந்து 2,481 மெகா வாட் மின்சாரமும், தனியார் உற்பத்தி நிலையங்களிலிருந்து 1180 மெகா வாட் மின்சாரமும் வர வேண்டும்.
ஆனால், மின் நிலையங்களில் எப்போதுமே பழுது, பராமரிப்பு என ஏதாவது காரணத்தால் தமிழகத்தில் மொத்த உற்பத்தித் திறன் 7,000 மெகா வாட் அளவுக்கும் குறைவாகவே உள்ளது.
அதிலும் மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய 2,481 மெகா வாட் மின்சாரத்தில் தமிழகத்துக்கு 1,539 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால், அதிலேயே 942 மெகா வாட் பற்றாக்குறை நிலவுகிறது.
அதே போல ஆந்திர மாநிலம் ராமகுண்டம் அனல் மின் நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு 659 மெகா வாட் வர வேண்டும். ஆனால், அங்கிருந்து 510 மெகா வாட் மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
நெய்வேலி மின் நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு 700 மெகா வாட் மின்சாரம் கிடைக்க வேண்டும். ஆனால், 492 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது.
கல்பாக்கம் அணு மின் நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு 330 மெகா வாட் தரப்பட வேண்டும். ஆனால், அங்கு மொத்த உற்பத்தியே 330 மெகா வாட் அளவுக்கே உள்ளது. அதிலிருந்து தமிழகத்துக்கு 230 மெகாவாட் அளவு மட்டுமே கொடுக்கப்படுகிறது.
ஒடிஸ்ஸாமாநிலம் தால்ட்சர் அனல் மின் நிலையத்தில் தமிழகத்துக்கு 501 மெகா வாட் மின்சாரம் கிடைக்க வேண்டும். ஆனால் தமிழகத்துக்கு 277 மெகா வாட் மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
கர்நாடகம் மாநிலம் கைகா அணு மின் நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு 196 மெகா வாட் மின்சாரம் தரப்பட வேண்டும். ஆனால், அங்கிருந்து 150 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது.
இவ்வாறு மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் 942 மெகா வாட் அளவுக்கு பற்றாக்குறை உள்ளது.
இந்தப் பற்றாக்குறையை காற்றாலை மின் உற்பத்தி மூலமே தமிழகம் ஓரளவுக்கு சமாளித்து வருகிறது. ஆனால், காற்றாலை மின்சாரத்தின் அளவு எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. காற்றின் அளவைப் பொறுத்து அது நாளுக்கு நாள் மாறுபடும்.
காற்றாலை மின் உற்பத்தியின் அளவு குறையும்போதெல்லாம் மின் வெட்டு அதிகரித்து விடுகிறது.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

கடையநல்லூரில் மஸ்ஜித் முபாரக் நிர்வாக கமிட்டி சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

கடையநல்லூரில் மஸ்ஜித் முபாரக் நிர்வாக கமிட்டி சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் அருகேயுள்ள மெயின்பஜார் திடலில் மஸ்ஜித் முபாரக் ஜமாத் தலைவர் சைபுல்லா ஹாஜா ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினார். மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.
கடையநல்லூர் பேட்டை பகுதியில் அக்ஸா அறக்கட்டளை சார்பில் ரைஸ் மில் திடலில் பஷீர் அஹ்மத் உமரி, பள்ளிவாசல் மைதானத்தில் முஹிப்புல்லாஹ் உமரி, மக்காநகர் ஆயிஷா பள்ளிவாசல் திடலில் மவுலவி அஹ்மத் கபீர் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகையில் கடையநல்லூர் முழுவதிலும் இருந்து இஸ்லாமிய பெருமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் முபாரக் கமிட்டி மற்றும் அக்ஸா அறக்கட்டளை நிர்வாகிகள் சேகுதுமான், முஹம்மது கோரி, டி.எம்.ஜபருல்லாஹ், அப்துல் குத்தூஸ், அப்துல் மஜீத், கஸ்ஸாலிகோரி, எஸ்.எஸ்.ஜபருல்லாஹ், சேகனா, கலந்தர், இப்ராகிம், பைசல், அப்துல்காதர், அக்பர், பாவா, நூர் முஹம்மத், காஜாமைதீன் செய்திருந்தனர்.
கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கடையநல்லூரின் பெருநாள் கொண்டாட்டங்கள்

கடையநல்லூரின் பெருநாள் கொண்டாட்டங்கள்




































ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

வாசகர்களுக்கும்,நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்

இனிய இணையதள இஸ்லாமிய பதிவர்களுக்கும்வாசகர்களுக்கும்,நண்பர்கள் அனைவருக்கும்  எனது இதயங்கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

எஸ்.எஸ்.எல்.சி துணைத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு இன்று

எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.மதிப்பெண் சான்றிதழை 29 மற்றும் 30 தேதிகளில் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் 

ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை



ஒவ்வொரு ஆண்டும் ஜுன், ஜுலை, ஆகஸ்ட் ஆகிய 3மாதங்கள் குற்றாலத்தில் சீசன் நிலவும். ஆனால் இந்த ஆண்டு ஜுலை மாதத்திலேயே குற்றால சீசன் தொடங்கியது. இருந்த போதிலும் அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்ததால் சீசன் களை கட்டாமல் இருந்து வந்தது. தற்போது குற்றால சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
 
இந்தநிலையில் கேரளாவில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் இன்று தண்ணீர் வரத்து அதிகரித்தது. குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் கூடுதல் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் உல்லாசமாக குளித்தனர்.
 
இந்தநிலையில் காலை 10 மணியளவில் ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

ஈமு கோழி மோசடி வழக்கில் விரைந்து நடவடிக்கை : முதல்வர்அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஈமு கோழி நிறுவனங்கள் செய்துள்ள மோசடி குறித்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் ஈமு பண்ணைகளில் முதலீடு செய்தோருக்கு, பணத்தை திருப்பித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார். ஈமு கோழிகளை பராமரிக்க கால்நடைத் துறை மூலம் தீவனம் வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். ஈமு பண்ணை மோசடி குறித்த புகார்களில் இதுவரை 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நெல்லை மாவட்டத்தில் 17 இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

நெல்லை மாவட்டத்தில் 17 இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் செய்யது அலி வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: 
தமிழகம் முழுவதும் நாளை (18ம் தேதி) பிறை பார்க்க வேண்டிய நாளாகும். ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாத பிறை தென்பட்டால் 19ம் தேதி ரம்ஜான் பண்டிகை நாளாகும். சனிக்கிழமை பிறை தெரியாவிட்டால் 20ம் தேதி திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிகை நாளாகும்.
ரம்ஜான் பண்டிகையன்று காலை 7 மணிக்கு நெல்லை மேலப்பாளையம், சந்திப்பு, பாளை., டவுன், பேட்டை, தாழையூத்து, ஏர்வாடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், பத்தமடை, அம்பை, சேரன்மகாதேவி, பொட்டல்புதூர், அச்சன்புதூர் ஆகிய பகுதிகளில் ஈத்கா திடல்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்தப்படுகிறது.
இந்த கூட்டு சிறப்பு பிரார்த்தனையில் அனைத்து ஆண்களும், பெண்களும் கலந்து கொள்ள வேண்டும். இந்த பகுதிகளில் வசிக்கும் 20 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, நெய், மளிகை சாமான்கள் தவ்ஹீத் ஜமாத் சார்பில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.