கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 21 ஏப்ரல், 2012

கடையநல்லூரில் பரவி வரும் ஒருவித மர்மக் காய்ச்சல்

கடையநல்லூர் பகுதியில் பரவி வரும் ஒருவித மர்மக் காய்ச்சலால் மேலக்கடையநல்லூர், பேட்டை பகுதி, தெருப்பகுதி, முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதிகளைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் (30), லட்சுமி (32), சுந்தரி (16), பரமேஸ்வரி (42), பத்மாவதி (55), மாடத்தியம்மாள் (60), கருப்பசாமி (16), குமார் (30), சபாரத்தினம் (42), சக்திவேல் (10), சுதா (9), காளிமுத்து (8), கண்ணன் (8), ராஜா (6), கங்கைஅமரன் (12) உள்பட 17 பேர் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 மேலும் கடையநல்லூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனராம்.
 கடந்த 6 மாதங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோரில் சுமார் 50 பேர் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவால் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனராம். தனியார் மருத்துவமனைகளில் இருந்தும் ஏராளமானோர் திருநெல்வேலியிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 நடவடிக்கை வேண்டும்: சில ஆண்டுகளுக்கு முன்பு கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் பரவிய ஒருவித மர்மக் காய்ச்சலால் பலர் இறந்தனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
 இதையடுத்து, அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் பல்வேறு நோய்த் தடுப்புக் குழுவினர் கடையநல்லூரில் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
 எனினும், மர்மக் காய்ச்சல் தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காய்ச்சலின் தீவிரம் அதிகரிப்பதற்குள் மாநில சுகாதாரத் துறை கடையநல்லூருக்கு சிறப்பு மருத்துவக் குழுக்களை அனுப்பி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக