கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 7 ஜூலை, 2012

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு


10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பதற்கான கடைசி தேதி வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது..
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
2012-2013ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களும் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு ஜூன் 30ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாநிலத்தின் பல இடங்களில் இருந்தும் காலநீட்டிப்பு செய்ய கோரி கடிதங்கள் வந்துள்ளன. இது புதிய நடைமுறை என்பதாலும், பல தேர்வர்களுக்கு வாய்ப்பு அளிப்பதை கருத்தில் கொண்டும், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த 8ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், தேர்வு முடிவை எதிர்நோக்கியுள்ள தேர்வர்கள் தேர்ச்சி பெற்றால் நடப்பு ஆண்டிலேயே 10ம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்து கொள்ளலாம் என்பதாலும் பதிவு செய்யும் கடைசி தேதி வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
தனித்தேர்வர்கள் தேர்வுத்துறையின் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து விவரங்களை 2 நகல்களில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் வரும் 31ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக