கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

சிறுபான்மையின மாணவ- மாணவிகள் பரிசுத் தொகை உயர்வு: முதலமைச்சர் உத்தரவு

தமிழக அரசு வெளியிடடுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- 

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆங்கிலப் பேச்சாற்றலை மேம்படுத்தும் வகையில், ஒருவருக்கு 2,800 ரூபாய் வீதம் 160 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையினர் நல கல்லூரி, தொழில் நுட்ப, தொழிற் பயிற்சி விடுதிகளில் தங்கி பயிலும் 6,550 மாணவ, மாணவியருக்கு 1 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவில் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார். 

பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட/ சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கான பரிசுத் தொகை உயர்த்தப்பட்டது போல, சிறுபான்மையின மாணவ/மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மாவட்ட அளவில் தற்பொழுது 10 ஆம் வகுப்பில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் நிலையில் அதிக மதிப்பெண் பெறும் சிறுபான்மையினர் மாணவ/மாணவியருக்கு முறையே 1,500 ரூபாய், 1,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் என வழங்கப்பட்டு வரும் பரிசுத் தொகையினை முறையே 3,000 ரூபாய், 2,000 ரூபாய், 1,000 ரூபாய் என உயர்த்தியும், 12 ஆம் வகுப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் அதிக மதிப்பெண் பெறும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு முறையே 3,000 ரூபாய், 2,000 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் என வழங்கப்பட்டு வரும் பரிசுத் தொகையினை முறையே 6,000 ரூபாய், 4,000 ரூபாய், 2,000 ரூபாய் என உயர்த்தியும் வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

ஆதரவற்ற முஸ்லீம் சமுதாய மக்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்கள் சுயமாக சிறு தொழில்கள் செய்திட, இலவச தையல் இயந்திரங்கள், மாவரைக்கும் இயந்திரங்கள், மருத்துவ உதவித் தொகை, விதவை மற்றும் முதியோர் உதவித் தொகை வழங்கிட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் திரட்டப்படும் நன்கொடைக்கு ஈடாக அரசால் 1:1 என்ற விகிதத்தில் வழங்கப்படும் இணை மானியம், 1:2 விகிதத்தில் இருமடங்காக உயர்த்தியும், ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையான 10 லட்சம் ரூபாயை 20 லட்சம் ரூபாய் என உயர்த்தியும் வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இந்த உயர்வு 1.4.2012 முதல் அமல்படுத்தப்படும். இதற்காக 3 கோடியே 20 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவியர் பயன் பெறும் வகையில் 2012-13 ஆம் நிதியாண்டில் கட்டுமானப் பணி முடியும் தருவாயில் உள்ள 5 விடுதி களையும் சேர்த்து 103 பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் 8,365 மாணவ, மாணவியர்களுக்கு 4,204 எண்ணிக்கையிலான இரும்பிலான இரண்டடுக்கு கட்டில்களையும், குளிர் பிரதேச பகுதிகளில் இயங்கும் 2 பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் 100 மாணவர்களுக்கு 50 எண்ணிக்கையில் மரத்திலான இரண்டடுக்கு கட்டில்களையும் வழங்கிடவும், அதற்காக 3 கோடியே 71 லட்சத்து 57 ஆயிரத்து 620 ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

அரசின் இந்த நடவடிக்கைகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் அதிக ஊக்கத்துடன் கல்வி பயில வழிவகை செய்யும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக