கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 5 அக்டோபர், 2012

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 7% உயர்வு: முதல்வர்


தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழு விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், 1.7.2012 முதல் மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை அவர்களது அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்த்தி வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.  இதன் அடிப்படையில், 1.7.2012 முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை அவர்களது அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதே போன்று, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும் 1.7.2012 முதல் ஏழு விழுக்காடு உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஏழு விழுக்காடு அகவிலைப்படி உயர்வு 1.7.2012 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள்; ஆசிரியர்கள்; வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள்; அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள்; ஊராட்சி உதவியாளர்கள்; எழுத்தர்கள்; மற்றும் வழக்கமாக அகவிலைப்படி பெறும் அனைவருக்கும் பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,443 கோடியே 52 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களை மேலும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வழிவகுக்கும் என்று உறுதியாக நம்புவதாக கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக